Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொட்டும் மழையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Print PDF

தினகரன்             07.12.2010

கொட்டும் மழையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வேலூர், டிச.7: சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று கொட்டும் மழையிலும் அகற்றினர். வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ ரோட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறப்பட்டது.

இதை அகற்ற வேண்டும் என நகராட்சி முடிவு செய்தது. இதற்கு ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, சத்துவாச்சாரி நகராட்சி செயல் அலுவலர் சண்முகம் மேற்பார்வையில் ஊழியர்கள் நேற்று காலை 8 மணிக்கு அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையறிந்த கடை உரிமையாளர்கள் அவசர அவசரமாக கடைகளில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அனைத்து கடைகளும் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டன. கடைகளில் இருந்த இரும்பு கூரைகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்களை நகராட்சி லாரி மூலம் ஊழியர்கள் அள்ளிச் சென்றனர்.

இதுகுறித்து செயல் அலுவலர் சண்முகம் கூறியதாவது, ‘சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் ஆக்கிரமித்து 21 கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பான வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று (நேற்று) காலை ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டது. இனி ஆர்டிஓ ரோடு அகலப்படுத்தி சாலை அமைக்கப்படும்என்று கூறினார். வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நேற்று அகற்றப்பட்டது. இதனால் சாலை அகலமாக காணப்படுகிறது.