தினமணி 07.12.2010
சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்
வேலூர், டிச. 6: வேலூர் சத்துவாச்சாரியில் 21 ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிர்வாகம் திங்கள்கிழமை காலை அதிரடியாக அகற்றியது. வேலூர், சத்துவாச்சாரி நகராட்சிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகச் சாலைப் பகுதியை ஆக்கிரமித்து 21 கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன.
இக்கடைகளை அப்புறப்படுத்துவதில் 15 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வந்ததால், நகராட்சி நிர்வாகம் அக்கடைகளை அகற்றுவதில் தடை நீடித்தது.
இந்நிலையில், நீதிமன்ற தடை உத்தரவு கடந்த சில தினங்களுக்கு முன் நீங்கியதாகத் தெரிகிறது. அதையடுத்து சத்துவாச்சாரி மூன்றாம் நிலை நகராட்சி செயல் அலுவலர் சண்முகம், வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சீத்தாராம் ஆகியோர் தலைமையில், ஆய்வாளர் பழனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புடன் அக்கடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.