தினகரன் 16.12.2010
திருவொற்றியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவொற்றியூர், டிச.16: திருவொற்றியூர் காலடிப்பேட்டை சன்னதி தெருவில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகளின் கூரைகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் சாலை குறுகலானது. நடந்துசெல்பவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். அந்த கடைகளை அகற்றும்படி ஆணையர் கலைச்செல்வன் உத்தரவிட்டார்.
அதன்படி, நகரமைப்பு அலுவலர் டேனியல் தலைமையில் ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், செந்தில்குமார் ஆகியோர், ஊழியர்களுடன் அங்கு நேற்று சென்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆணையர் கலைச்செல்வன் கூறுகையில், ‘நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.