தினகரன் 07.01.2011
எழும்பூர் ரயில் நிலையம் எதிரே சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
சென்னை, ஜன. 7:
எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ளது கென்னத் லேன் பகுதி. இந்த பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்துக்காக 36 அடி அகலத்துக்கு சாலை பகுதி உள்ளது.
ஆனால் அந்த பகுதியில் உள்ள 13 கடைகள் மற்றும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிறிது சிறிதாக சாலையை ஆக்கிரமித்து தற்போது கென்னத் லேன் சாலை 18 அடியாக குறைந்து விட்டது. இதுபற்றி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் கென்னத் லேன் சாலையை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கும் மேலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், அந்த கடைகள், நிறுவனங்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், ‘எங்களிடம் கருத்து கேட்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை இடிக்க முடிவு செய்துள்ளனர்’ என்று கடந்த 29ம் தேதி ஐகோர்ட்டில் அவர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அப்போது, நீதிமன்றம் “கடைக்காரர்களின் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கலாம் 1396984945 என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவு கிடைக்காததால், மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் நேற்று முன்தினம் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
ஆனால் நீதிமன்ற உத்தரவை கடை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு இன்றுதான் கிடைத்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டு விரைவில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அனைத்தும் அகற்றப்படும்” என்றார்.