தினகரன் 28.01.2011
ஒரே நாளில் மாநகராட்சி அதிரடி ரூ. 300 கோடி மதிப்புள்ள 115 கிரவுண்ட் நிலம் மீட்பு
சென்னை, ஜன.28:
மாநகராட்சிக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள 115 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டது.
வணிக வளாகங்கள், குடியிருப்பு வளாகங்கள் கட்டும் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட திறந்தவெளி நிலத்தை ( ஓஎஸ் ஆர் நிலம்) இடத்தின் உரிமையாளர் சிஎம்டிஏவிற்கு ஒதுக்கி தரவேண்டும். இந்த திறந்தவெளி நிலத்தை சிஎம்டிஏ, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும். அங்கு பூங்காக்கள் அமைக்கப்படும்.
ஓஎஸ்ஆர் நிலங்களை மீட்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அயனாவரம், குன்னூர் நெடுஞ்சாலையில் 21 ஆயிரம் சதுரஅடி நிலத்தை மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். அங்கு ‘மாநகராட்சிக்கு சொந்தமான இடம்‘ என்ற பெயர் பலகையும் வைக்கப்பட்டது.
இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
அயனாவரத்தில் மட்டும் 4 இடங்களில் 28 கிரவுண்ட், நுங்கம்பாக்கம் மண்டலத்தில் 8 இடங்களில் 43 கிரவுண்ட், கீழ்ப்பாக்கம் மண்டலத்தில் 13 இடங்களில் 44 கிரவுண்ட் என மொத்தம் இன்று ஒரே நாளில் 115 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 300 கோடி. கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 3,500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடக்கும்.
இவ்வாறு மேயர் கூறினார்.
ஆணையர் தா.கார்த்திகேயன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. உடன் இருந்தனர்.