தினமணி 02.08.2012
ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு
திருத்துறைப்பூண்டி, ஆக.1: திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் எதிரே கோவில் குளக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 4 கடைகள் ஆட்சியர் உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் உள்ள 32 குளங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான குளங்களுக்கு நீர் வரும் வழி அடைபட்டுவிட்டதால் குளங்களுக்கு தண்ணீர் வந்து, செல்ல முடியவில்லை. இதனால் கடந்தாண்டு வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை 10 நாள்கள் பாதிக்கப்பட்டது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்,மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சி. நடராஜன் கடந்த சனிக்கிழமை நகரின் பிரதானப் பகுதிகளில் உள்ள செங்கமலக்குளம், ராமர்மடக்குளம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, அந்தக் குளங்களின் எல்லைகளை வரையறுக்க உத்தரவிட்டார். இதன்படி அவை சர்வே செய்யப்பட்ட பிறகு, ராமர்மடக் குளக்கரையில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சிமென்ட் கூரை அமைத்து, அவற்ரை நிரந்தரக் கட்டடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அந்தக் கடைகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் ந. சங்கரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் 4 கடைகளையும் பிரித்து அப்புறப்படுத்தினர்.