தினமலர் 08.08.2012
அத்திப்பட்டு ஆக்கிரமிப்பு ரூ.10 கோடி நிலம் மீட்பு
அம்பத்தூர் : தனியார் ஆக்கிரமித்திருந்த, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு ஜஸ்வந்த் நகரில், 12 கிரவுண்டு, அரசு புறம்போக்கு நிலத்தை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தார்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜியிடம், சமீபத்தில் புகார் தெரிவித்தனர்.
கலெக்டர் உத்தரவின் பேரில், அம்பத்தூர் தாசில்தார் ராஜு, துணை தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை நேற்று பார்வையிட்டனர். பின்னர், அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் முன்னிலையில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நிலத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.