தினமலர் 17.08.2012
அரசு பாலிடெக்னிக் அருகே மிகப் பெரிய ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து தள்ள நோட்டீஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடி டூ பாளை ரோட்டில் அரசு பாலிடெக்னிக் அருகே மிகப் பெரிய 11 ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மிகப் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் துவங்க உள்ளது.தூத்துக்குடி டூ பாளை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் பொருட்டு நான்குவழிச்சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு அமைக்கும் பணிக்கு சுமார் 3 கோடி ரூபாயிற்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தப் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடியில் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு கட்டடமாக இருந்த ஈகிள் புக் சென்டர் உள்ளிட்ட பெரிய கட்டடங்கள் இடித்து பெரும் போலீஸ் பட்டாளத்தின் பாதுகாப்புடன் இடித்து தள்ளப்பட்டன.
இதற்கான பணிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த கட்டடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து இனிமேல் போக்குவரத்து நெருக்கடிக்காக எந்த ஒரு கட்டடத்தை இடிக்க மாவட்ட நிர்வாகம் தயங்காது என்றும், ஆக்கிரமிப்புகளை பொறுத்தமட்டில் யார் சொன்னாலும் அதனை தடுக்க முடியாது என்கிற பரவலான கருத்து வியாபாரிகள் மத்தியில் உருவானதாக கூறப்படுகிறது. இதனால் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகளுக்கு பணி செய்வது எளிதான நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஆக்கிரமிப்ப தூத்துக்குடியில் அகற்றப்பட்டாலும் அதனால் பிரச்னை, மோதல் என்கிற எந்த ஒரு சிறு பிரச்னை இல்லாமல் இதற்கான பணிகள் அமைதியாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அரசின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் இதுதான் நடக்கும் என்பது தூத்துக்குடியில் உள்ளவர்களுக்கு முழுமையாக தெரியும் நிலை ஏற்பட்டுவிட்டதால் இதற்கான பணிகள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் அடுத்த கட்டமாக மிகப் பெரிய ஆக்கிரமிப்பு அகற்றும் மூன்றாம் கட்ட பணி இன்னும் ஒரிரு நாளில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மொத்தம் 410 சதுர மீட்டர், அதற்கு மேல் உள்ள மீட்டர் கொண்ட கடைகள், அதற்கு குறைவான மீட்டர் கொண்ட கடைகள் போன்ற ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து தள்ள வருவாய்துறை மற்றும் மாநகராட்சி மூலம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக்கிற்கு மேல் புறம், சிஎஸ்ஐ சர்ச் கீழ்புறம் உள்ள மிகப் பெரிய வர்த்தக நிறுவனம் மற்றும் 11 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளீர்கள்.
நீங்களாக அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுங்கள். இல்லை என்றால் அரசு மூலம் அந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டதால் அவர்களாக அந்த ஆக்கிரமிப்பு கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் ஜெ.சி.பி உதவியுடன் இதன் தொடர்ச்சியாக அந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அனைத்தும் இடித்து தள்ளப்படும் என்று வருவாய்துறை மற்றும் மாநகராட்சி துறைகளின் சார்பில் அதிரடி எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பழைய பஸ் ஸ்டாண்டை எதிரே உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை எந்த முறையில் மேற்கொள்ளலாம் என்று தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்குவது குறித்தும் தீவிர டிஸ்கஸ் செய்யப்பட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.