தினமலர் 17.08.2012
குரும்பலூர் டவுன் பஞ்.,ல் அரசு நிலம் ஆக்ரமிப்பு: 38 வீடு இடிப்பு
பெரம்பலூர்: குரும்பலூரில் உள்ள தெப்பக்குளம் மற்றும் மருதையான் குட்டை ஆகிய நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட 38 வீடுகள் நேற்று இடிக்கப்பட்டன.நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் தெப்பக்குளம் மற்றும் மருதையான் குட்டை ஆகிய நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்ரமிப்பு செய்து குடியிருந்து வந்த 38 குடும்பத்தினரை அகற்ற கலெக்டர் தரேஷ்அஹமது உத்தரவிட்டார்.
இதன்பேரில், டவுன் பஞ்சாயத்து தலைவர் பாப்பம்மாள், துணை தலைவர் செந்தில்குமார், தாசில்தார் பவனந்தி, செயல் அலுவலர் ஆறுமுகம், ஆர்.ஐ., கவிதா ஆகியோர் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.
அந்த இடத்திற்கு பதிலாக களம்பட்டியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் தலா ஒன்றரை சென்ட் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து ஆக்ரமிப்புதாரர்கள் அரசு வழங்கிய இடத்திற்கு குடியேறினர்.இதையடுத்து தாசில்தார் பவனந்தி, செயல் அலுவலர் ஆறுமுகம், ஆர்.ஐ., கவிதா ஆகியோர் முன்னிலையில் நேற்று நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 38 குடிசை வீடுகள் ஜே.சி.பி., மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.