தினமணி 17.08.2012
ஆக்கிரமிப்பு: குரும்பலூர் பேரூராட்சியில் 38 வீடுகள் இடிப்பு
பெரம்பலூர், ஆக. 16: பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் தெப்பக்குளம், மருதையான் குட்டை ஆகிய நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 38 வீடுகள் வியாழக்கிழமை இடிக்கப்பட்டன.இந்தப் பகுதிகளில் ஆக்கிரமித்து குடியிருந்துவந்த 38 குடும்பத்தினரை அகற்ற மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது அண்மையில் உத்தரவிட்டார்.இதன்பேரில், பேரூராட்சித் தலைவர் என். பாப்பம்மாள், துணைத் தலைவர் செந்தில்குமார், வட்டாட்சியர் பவனந்தி, செயல் அலுவலர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் கவிதா ஆகியோர் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், அவர்களுக்கு களம்பட்டியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் தலா ஒன்றரை சென்ட் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டு, குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, 38 குடும்பத்தினரும் அரசு வழங்கிய இடத்துக்கு குடியேறினர்.
இந்த நிலையில், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 38 குடிசைகளும் அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.