தினமலர் 22.08.2012
இலஞ்சி குளத்தில் ஆக்ரமிப்பு அகற்றம்
தென்காசி : இலஞ்சி தொண்டைமான் குளத்தில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன.தென்காசி அருகே இலஞ்சி டவுன் பஞ்., பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் பயன்பாட்டிற்காக 16 குளங்கள் உள்ளன. சாரல் மழை ஏமாற்றியதால் இதில் பெரும்பாலான குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இலஞ்சி தொண்டைமான் குளத்திற்கு ஐந்தருவி வெண்ணமடை குளத்ததலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இக்குளத்தில் சிறிதளவு தண்ணீர் உள்ளது.
தொண்டைமான் குளத்து புரவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் நெல் விளைச்சல் முற்றி அறுவடைக்கு தயாராகி விடும். விவசாயிகள் இக்குளத்தின் கரை வழியே வயல் பகுதிக்கு சென்று வருகின்றனர். விவசாயிகள் ஓட்டி செல்லும் வாகனங்கள் குளத்து கரையில் செல்ல முடியாத விஷ செடிகள், புதர்கள் வளர்ந்து ஆக்ரமிப்பு செய்துள்ளன. இந்த ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வகையில் குளத்தின் கரையில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. புல்டோசர் மூலம் விஷ செடிகள், புதர்கள் அகற்றப்பட்டன. கரையை செம்மை படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.