Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் ஆக்ரமிப்பாளர்களை தடுக்க கண்காணிப்பு குழு

Print PDF
தினகரன்     22.08.2012

சேலம் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் ஆக்ரமிப்பாளர்களை தடுக்க கண்காணிப்பு குழு
 
சேலம்,: சேலம் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வாராமல் இருக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறினார்.

சேலம் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் முதலில் அகற்றப்பட்டது. தற்போது புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று மேயர் சவுண்டப்பன், கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர் அசோகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதில் புதிய பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டேண்டில் கட்டணம் வசூலிக்கப்படும் ரசீதை கமிஷனர் அசோகன் ஆய்வு செய்தார். அதில் ரூ.2, ரூ.3 என பேனாவால் எழுதி வழங்கப்பட்டது. அப்போது மாநகராட்சி சீல் வைக்கப்பட்ட அச்சு கட்டண ரசீது எங்கே என கமிஷனர் கேள்வி எழுப்பினார். பின்னர் சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமேஷ்பாபுவை அழைத்து, நாளை முதல் சைக்கிளுக்கான ரசீதில் ரூ.2 எனவும், மோட்டார் சைக்கிள் ரசீதில் ரூ.3 எனவும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதில் மாநகராட்சி சீலும் இருக்க வேண்டும். அந்த ரசீதை தான் வழங்க வேண்டும், என்றார்.

மேலும் எல்லையை மீறி சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற வேண்டும் என மேயர் சவுண்டப்பன் எச்சரித்தார். இதையடுத்து பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறைகளை கமிஷனர் ஆய்வு செய்தார். அதில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், அனைவருக்கும் ரசீது வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். பின்னர் கமிஷனர் அசோகன் நிருபர்களிடம் கூறும்போது, ‘சேலம் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியுள்ளோம். இனி ஆக்கிரமிப்பு கடைகள் வராமல் தடுக்கவும், பேருந்து நிலையங்களை சுகாதாரமாக வைத்திருக்கவும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதில், உதவி பொறியாளர், வருவாய் ஆய்வாளர், உதவி வருவாய் ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தொடர்ந்து பேருந்து நிலையத்தை கண்காணித்து வருவார்கள். புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார பணியை தனியார் நகைக்கடை நிர்வாகம் கவனித்து வருகிறது. அவர்களிடம் இரவு நேர துப்புரவு பணியை மேற்கொள்ள 10 பணியாளர்களை கேட்டுள்ளோம். அவர்கள் இன்னும் இரண்டு நாளில் இரவு சகாதார பணியை மேற்கொள்வார்கள்,‘ என்றார்.

பணியை செய்யாவிட்டால் சஸ்பெண்ட்சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 2 கழிவறைகளும் சுத்தமாக இருக்க வேண்டும் எனவும், இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சூரமங்கலம் மண்டல அதிகாரிகளுக்கு கமிஷனர் அசோகன் உத்தரவிட்டார். அப்போது மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா எனவும் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் நீங்கள் சஸ்பெண்ட் ஆகிவிடுவீர்கள் என அதிகாரிகளை கமிஷனர் கடுமையாக எச்சரித்தார்.
Last Updated on Wednesday, 22 August 2012 11:43