தினமலர் 23.08.2012
அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பு நிரந்தர கட்டடங்களை அகற்றாமல், வாறுகால் சிலாப்புகளை அகற்றியதால், மக்கள் அதிருப்தியடைந்தனர்.
அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், நகராட்சியினர், புதிய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, காசுக்கடை பஜார் பகுதி வாறுகால்களின் மேல் மூடிப்பட்டிருந்த சிலாப்பு கள், கற்கள், அகற்றம் செய்தனர்.
பல மாதங்களுக்கு முன், நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் வாறுகால்களை சேதப்படுத்தினர். இதனால், கடைகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். வாறுகால்கள் கட்டி தரப்படும் என, நகராட்சி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மாதங்கள் பல ஆகியும் வாறுகால்கள் கட்டி தரப்படவில்லை. நகரின் பல பகுதிகளில் நகராட்சி இடங்களில், நிரந்தர கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதை விட்டு, நேற்றும் பெயருக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். பஜார் பகுதிகளில் முறையான வாறுகால்களை கட்டியும், நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.