தினகரன் 31.08.2012
ரூ. 40 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவை, : கோவை யில் ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
கோவை மாநகரில் புதி தாக உருவாகும் லே-அவுட்களில் 40 சதவீதம் சாலை, பூங்கா மற்றும் ரிசர்வ் சைட் பயன்பாட்டுக்கு விடப்பட வேண்டும். மீதமுள்ள 60 சத வீத நிலங்களில் வீட்டுமனை பிரித்துக்கொள்ளலாம்.இந்த விதிமுறை கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பலர் அங்கீகாரம் பெற்றுக்கொண்டு ரிசர்வ் சைட் விடுவதில்லை.
இன்னும் சிலர், அங்கீகா ரம் பெற்று முறைப்படி விடப்பட்ட ரிசர்வ் சைட்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இதுபற்றி ஆய்வு நடத்தி, பட்டியல் தயாரிக்கும்படி மாநகராட்சி மேயர் செ.ம.வேலு சாமி, கமிஷனர் பொன்னுசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மின்மயானத்துக்கு எதிரே மாநகராட்சிக்கு சொந்த மான 1.20 ஏக்கர் ரிசர்வ் சைட் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் கூரை அமைத்து குடோன்களாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த இடத்தை மாநகராட்சி கமிஷனர் பொன்னு சாமி நேற்று நேரில் பார்வையிட்டார். உடனடியாக கூரை களை அகற்றிவிட்டு நிலத்தை மீட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் புல்டோசர் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. 1.20 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, சுற்றி லும் வேலி அமைக்கப்பட்டது. அந்த இடத்தில், ‘‘இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம், அத்துமீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்‘‘ என எச்சரிக்கை போர்டு நட்டுவைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.40 கோடி.
இதுபற்றி கமிஷனர் கூறு கையில், ‘‘இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக ஆய்வுநடத்தப்பட்டு, பறிமுதல்செய்யப்படும்‘‘ என்றார்.