தினமலர் 21.03.2013
விழுப்புரம் நகராட்சியில் கால்வாய் பணிகள் தீவிரம்
விழுப்புரம்:விழுப்புரம் பழைய கோர்ட் ரோடில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் பழைய கோர்ட் சாலையில் இருந்த வடிகால் வாய்க்கால் சேதமடைந்ததால், சுற்றுப்பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் வெளியேற வழி யின்றி பாதித்து வந்தது.
சாலையை பயன்படுத்தி வரும் பள்ளி மாணவர்கள், நகர போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனையடுத்து, நகராட்சி பொது நிதியில் 9.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பழைய கோர்ட் ரோடில் 300 மீட்டர் தொலைவில், 4 அடி ஆழத்திலும், 1.85 மீட்டர் அகலத்திலும், புதியதாக சிமென்ட் கால்வாய் அமைத்து வருகின்றனர்.
இந்த வாய்க்கால் இணையும் திரு.வி.க., வீதி சந்திப்பு பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் பணிகள் பாதித்து நின்றது. இந்த கடைகளின் முகப்பு ஆக்கிரமிப்புகள், நகராட்சி மூலம் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
இதனையடுத்து ஆக்கிரமிப்பு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்தது.