Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை

Print PDF
தினமணி         23.03.2013

அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சிப் பகுதியில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் மாநகராட்சி மூலம் அகற்றப்படுகின்றன.

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற விளம்பரங்கள், அனுமதியை விட கூடுதலான அளவுகளில் வைக்கப்படுகின்றன. மேலும் நியான் விளக்குகள் மற்றும் டிஜிட்டல் விளக்குகள் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் விதமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அரசு நிறுவனங்களின் சுற்றுச் சுவர்கள், தனியார் சுவர்கள் ஆகியவற்றில் பெயிண்ட்டாலும், ஸ்டிக்கர் மூலமாகவும் விளம்பரம் செய்யப்படுகிறது. இது அரசு விதிகளுக்கு முரணானது.

அனுமதி இல்லாமல் செய்யப்படும் விளம்பரத்தில் உள்ள நிறுவன உரிமையாளர், கட்டட உரிமையாளர் அல்லது தனியார் நில உரிமையாளர், விளம்பரம் செய்யும் நிறுவனம் மீது மாநகராட்சி விளம்பர சட்டப்படி சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வழி உள்ளது.

எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும் பொருட்டு விளம்பர நிறுவன உரிமையாளர்கள், தனியார் கட்டட, நில உரிமையாளர்கள் அவர்களாகவே விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை தொடரும்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களின் முன்பாக கட்டட  அனுமதி விளம்பரப் பலகை வைக்காவிட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.