தினமணி 17.09.2009
ஆக்கிரமிப்பு அகற்றம்: 61 வீடுகள் இடிப்பு
தூத்துக்குடி, செப். 16: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 61 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரம் கஸ்பர் கிணறுப் பகுதியில் பல வீடுகள் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
இவற்றை அகற்ற பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வீடுகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு அப் பகுதி தேவைப்படுவதால் அந்த இடத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் தலைமையில் அலுவலர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வீடுகள் இடிக்கப்பட்டன. சிலர் தாங்களாகவே முன்வந்து உடைமைகளை அகற்றினர். இப் பகுதியில் மொத்தம் 61 வீடுகள் இடித்து அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.