Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு... அகற்றம்

Print PDF
தினமலர்                27.04.2013

புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு... அகற்றம்

சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமரும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த, 13 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். முன்னறிவிப்பின்றி கடைகள் அகற்றப்பட்டதால், வியாபாரிகள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சேலம், புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பஸ்ஸுக்கு காத்திருக்கும் நடைபாதைகளில், பெட்டி கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கடை வியாபாரிகள், இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றனர்.புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க, மாநகராட்சிக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, நேற்று, புது பஸ் ஸ்டாண்டில் நடைபாதையில் உள்ள கடைகள் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளை, கடை வியாபாரிகள் முற்றுகையிட்டு, கடைகளை அகற்றக் கூடாது, என்று வலியுறுத்தினர். முன்னறிவிப்பு எதுவுமில்லாமல், மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்றுவதாக, வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.பகல், 12 மணி வரை கடைகளை அகற்ற, வியாபாரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன் பின், மாநகராட்சி மாநகராட்சி செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் சிபிசக்ரவர்த்தி தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நடைபாதையில் வைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில், புது பஸ் ஸ்டாண்டில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புது பஸ் ஸ்டாண்டில் இருந்த, 13 கடைகளை மாநகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.சில மாதங்களுக்கு முன், பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு விட்டது. புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் மாநகராட்சி நடவடிக்கை வரவேற்கத்தக்கது.இதே நிலை நீடிக்க வேண்டுமே தவிர, பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது போல், சில நாட்களில் மீண்டும் ஆளுங்கட்சி ஆதரவு பெற்றவர்களுக்கு கடை ஒதுக்கி கொடுக்கக் கூடாது, என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.