தினமணி 24.09.2009
நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருநெல்வேலி, செப். 23: திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீர் கால்வாயை அடைத்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
திருநெல்வேலி நகரம் 41 வது வார்டுக்கு உட்பட்ட மேலரதவீதியில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து, அங்குள்ள கடை உரிமையாளர்கள் படிக்கட்டுகளையும், சிமெண்ட் பிளேட்டுகளையும் அமைத்திருந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயை விட்டு வெளியே வந்து, பெரும் சுகாதார சீர்கெட்டை
ஏற்படுத்தியது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், புதன்கிழமை கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளையும், சிமெண்ட் பிளேட்டுகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
இப் பணி மாநகராட்சி உதவி ஆணையர் பாஸ்கர், உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 70 பேர் பங்கேற்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர், அங்கு கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது.