தினமணி 24.09.2009
பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றப்படும்: ஆட்சியர்
பெரம்பலூர், செப். 23: பெரம்பலூர் மாவட்டத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளுக்கு அனுமதிப் பெறுதல் மற்றும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள் ஆகியவை அகற்றுவது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதிப் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்கள் அக். 7-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதிப் பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதிப் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களை காவல் துறையினரின் பாதுகாப்புடன், மாவட்டத்தில் உள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் அகற்றப்படும்.
மேலும், அனுமதிப் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவைகளை அகற்றுவதற்கு உண்டான செலவினங்களை அந்த விளம்பரத்தில் உள்ள நிர்வாக உரிமையாளரிடம் வசூலிக்கப்படும்.
எனவே, அக். 7-ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதிப் பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்கள் அனைத்தும் அகற்றப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. வனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் சு. பழனிசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேவதாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முத்துசாமி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் எஸ். ராமகிருஷ்ணராஜன் மற்றும் வட்டாட்சியர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.