தினமணி 11.11.2009
சூரமங்கலம் உழவர் சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்
சேலம், நவ.10: சேலம் மாநகராட்சி சூரமங்கலம் உழவர் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சேலம் ஜங்ஷன் செல்லும் வழியில் சூரமங்கலம் உழவர் சந்தை உள்ளது. இதில் சிவதாபுரம், சேலத்தாம்பட்டி, இரும்பாலை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த உழவர் சந்தைக்கு வெளியே ஏராளமான தனியார் கடைகள் முளைத்து, விவசாயிகளுகக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. மேலும் இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இது குறித்த பொதுமக்களின் புகாரின் பேரில் அக்டோபர் 9-ம் தேதி ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அப்பகுதியில் மீண்டும் கடைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து இக்கடைகளை மீண்டும் அகற்ற மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சூரமங்கலம் போலீஸôர் பாதுகாப்புடன், வேளாண்மைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றினர்.
""உழவர் சந்தைகளுக்கு 100 மீட்டர் சுற்றளவில் தனியார் கடைகள் எதுவும் அமைக்கக் கூடாது என்றும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் மாநகராட்சி ஆணையர் பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.