தினமணி 12.11.2009
ஆம்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆம்பூர், நவ.12: ஆம்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை ஆம்பூர் நகராட்சியினர் வியாழக்கிழமை அகற்றினர்.
ஆம்பூரில் நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. நகராட்சி ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்ற வேண்டுமென அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பெருத்த இடையூறாக இருந்து வந்தது.
இதை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்ற வேண்டும். இல்லையெனில் நகராட்சி அதை அகற்றும் என கடந்த வாரம் ஆம்பூர் நகராட்சி ஆணையர் தா. உதயராணி தெரிவித்தார்.
அந்த அறிவிப்பையொட்டி ஆம்பூர் சுண்ணாம்புகார தெருவில் ஆம்பூர் நகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினர். மேலும் ஆம்பூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடைகளுக்கு முன்பு மேடை அமைக்க சுமார் 4 அடி இடத்தை விட்டுவிட்டு மீதி இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென வணிகர்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.