தினமணி 16.11.2009
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடலூர்,நவ.15: மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கடலூர் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மோசம் அடைந்து கிடக்கும் கடலூர் நகரச் சாலைகளை சீரமைக்கவும், மழை காலத்தில் போக்குவரத்துப் பிரச்னைகள் எழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை முன் இருந்த ஆக்கிரமிப்புகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. வேளாண் வணிக துணை இயக்குநர் தனவேல் தலைமையில் வேளாண் அலுவலர்கள், கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின், போக்குவரத்துப் போலீஸ் ஆய்வாளர் ராமதாஸ் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
உழவர் சந்தைக்குள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தும், உழவர் சந்தைக்கு வெளியே, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த கடைகள், வாழைத்தார், கரும்பு, வாழை இலை, பழங்கள் விற்பனை மற்றும் கீரை விற்பனைக் கடைகள் அகற்றப்பட்டன. மீண்டுóம் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டனர்.
அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே உழவர் சந்தைக்குள் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் என்றும், மற்றவர்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால், தோட்டக்கலைத் துறைக்கு விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்று உழவர் சந்தைக்குள் பொருள்களை விற்பனை செய்யலாம் என்றும் ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.