தினமணி 18.11.2009
ஆவடியில் வீட்டுவசதி வாரிய நிலம் மீட்பு
சென்னை, நவ. 17: சென்னை ஆவடியில் தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீட்டுவசதி வாரிய நிலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முகப்பேர் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை: தனியாரின் ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை மூலம் மீட்கும் பணிகளை வீட்டுவசதி வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, ஆவடியில் வீட்டுவசதி வாரிய திட்டப்பகுதியில், வாரியத்துக்கு சொந்தமான நிலம் தனியார் சிலரது ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 56 லட்சம் மதிப்பிலான 2.5 கிரவுண்ட் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. இந்த நிலத்தில் மேலும் ஆக்கிரமிப்புகள் வாராமல் தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைத்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.