தினமணி 03.12.2009
ஜார்ஜ் டவுனில் பூக்கடைகளை அகற்ற உத்தரவு
சென்னை, டிச.2: சென்னை ஜார்ஜ்டவுனில் உள்ள பட்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ வியாபார கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சில்லறை பூ வியாபாரிகள் நல சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் ஆகியோர் ஜார்ஜ்டவுன் பட்ரியன் தெருவில் பூ வியாபரம் செய்வதில் தலையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டது. சென்னை கோயம்பேடு மொத்த பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோயம்பேடு வணிக வளாகத்தைத் தவிர சென்னை மாநகரத்தின் பிற இடங்களில் மொத்த பூ வியாபாரக் கடைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பட்ரியன் தெருவில் 138 மொத்த பூ வியாபாரக் கடைகளை அகற்ற வேண்டும் என்று வேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2001-ம் ஆண்டிலேயே உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பூ வியாபாரிகள் இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடையை 2004-ம் ஆண்டு பெற்றுள்ளனர்.
ஆனால், அந்தத் தடையை நீக்க இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்ரியன் தெருவில் தற்போதும் மொத்த பூ வியாபாரம் நடைபெற்றால், அந்தக் கடைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
அதேபோல், பட்ரியன் தெருவில் உள்ள சில்லறை வியாபாரப் பூக்கடைகளை அகற்றுவதற்கு முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.