தினமணி 08.01.2010
வருவாய்த்துறை நிலத்தை மீட்டுக்கொடுத்த கோவை மாநகராட்சி அதிகாரிகள்
கோவை, ஜன.7: வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தை, கோவை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
கோவை சிவானந்தாகாலனி 30 அடி சாலையில் உள்ள வள்ளுவர் வீதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த ராமன் வீடு கட்டி தோட்டமும் அமைத்திருந்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை முயன்றும் அந்த நிலத்தை மீட்க முடியவில்லை.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளின் உதவியை நாடினர். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் செüந்தரராஜன் தலைமையில் வடக்கு மண்டல உதவி ஆணையர் பொன்முடி, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டாட்சியர்கள் காந்திமதி, கிருஸ்ணவேணி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வியாழக்கிழமை சென்றனர்.
பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க முயன்றபோது அங்கு வந்த ராமனின் மகன் செல்லமுத்து மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மீது சிலர் கற்களையும் வீசினர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீட்டை இடித்த அதிகாரிகள், அந்த இடத்தை மீட்டு வருவாய்த்துறையிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.