தினமணி 11.01.2010
வி.கே.புரத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றம்அம்பாசமுத்திரம், ஜன. 10: விக்கிரமசிங்கபுரத்தில் மங்கம்மாள் சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டனர்.
விக்கிரமசிங்கபுரம் பசுக்கடைவிளையில் உள்ள மங்கம்மாள் சாலை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இதனால், இச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.
இதையடுத்து, இச் சாலையைத் திறக்க அப்போதைய எம்எல்ஏ நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு அச் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இதற்கிடையே, அச் சாலையில் பசுக்கடைவிளையில் வசிக்கும் ஒருவர் தனக்குச் சொந்தமானது எனக்கூறி சாலையின் குறுக்கே கல்வைத்து ஆக்கிரமித்திருந்தார். இதை ஆட்சேபித்து பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர்.
இப் பிரச்னை குறித்து பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், சேரன்மகாதேவி துணை ஆட்சியர் கே. வீரராகவராவ் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, மங்கம்மாள் சாலையில் தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பை நகர்மன்றத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன், நிர்வாக அதிகாரி இ. முருகன், அம்பாசமுத்திரம் துணை வட்டாட்சியர் நடராஜன், வருவாய் ஆய்வாளர் ரா. சிவசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் அகற்றினர். இதைத் தொடர்ந்து இச் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.