தினமலர் 20.01.2010
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வாலாஜாவில் நாளை தொடக்கம்
வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நாளை தொடங்குகிறது. வாலாஜாவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, போலீசார் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில், ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலையின் இருபுறமும் "பேரிகார்டு' அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு நகராட்சி, தேசிய நெடுஞ்சாலை, வருவாய்த்துறை, காவல்துறையுடன் இணைந்து செயல்படவும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, பொங்கல் பண்டிகை வரை அவகாசம் தந்தால் நாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தருகிறோம் என்று வியாபாரிகள் உறுதியளித்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டு, "பேரிகார்டு' அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், நாளை முதல் 3 நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை, காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டுபிரசுரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.