Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை விரிவாக்கம்: மாநகராட்சிக்கு சொந்தமான 32 கடைகளை இடிக்க முடிவு

Print PDF

தினமணி 28.01.2010

சாலை விரிவாக்கம்: மாநகராட்சிக்கு சொந்தமான 32 கடைகளை இடிக்க முடிவு


திருப்பூர், ஜன.27: சாலை விரிவாக்கத்தையொட்டி திருப்பூர் காமராஜர் சாலையில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான 32 கடைகளையும் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளதை அடுத்து குத்தகைதாரர்கள் கடைகளை காலி செய்துள்ளனர்.

பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த திருப்பூர் மாநகரிலுள்ள பிரதான சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, அவிநாசி சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட சாலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநரின் மையப் பகுதியான பழைய பஸ் நிலையத்தையொட்டியுள்ள காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பழைய பஸ் நிலையம் வெளிப்புற நுழைவுவாயிலில் இருந்து பிள்ளையர் கோயில் வரையிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 32 கடைகளை இடிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு, அக்கடைகளை காலி செய்து கொடுக்கும்படி ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து, அக்கடைகளை இந்த ஆண்டு குத்தகை விடுவதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், காமராஜர் சாலையை விரிவுபடுத்துவதற்காக திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான 32 கடைகளையும் இடிக்க மாமன்ற ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அக்கடைகளை காலி செய்து கொடுக்கும்படி குத்தகைதாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. ÷இதையடுத்து, பெரும்பாலான கடைகளை குத்தகைதாரர்கள் தற்போது முழுமையாக காலி செய்துள்ளனர். இதனால், அப்பகுதி கடைகள் அனைத்தும் புதன்கிழமை மூடப்பட்டிருந்தன.

முழுமையாக அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்ட பின்னர் 32 கடைகளையும் இடித்து நெடுஞ்சாலைத்துறை வசம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 28 January 2010 10:08