தினமணி 01.02.2010
மரங்களில் விளம்பர பதாகைகள் அகற்றம்
பழனி ஜன.31: பழனி நகரில் மரங்களில் மேல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள்,தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்புதலின்பேரில் அகற்றப்பட்டன.
பழனி நகரில் சாலை ஓரங்களில் இருந்த மரங்களில், பல்வேறு நிறுவனத்தினரும் தங்களது விளம்பரங்களை ஆணியால் அறைந்தும், கம்பியால் கட்டியும் தொங்க விட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த மரங்களைக் காக்க, பாலசமுத்திரம் விவேகானந்தா சேவா டிரஸ்ட் விளம்பரங்களை அகற்ற முன் வந்தது.
இதுதொடர்பாக, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு டிரஸ்ட் சார்பில் அனுப்பப்பட்ட விண்ணப்பம் ஏற்கப்பட்டது.
இதனையடுத்து, பழனியாண்டவர் கலைக் கல்லூரி முதல் பஸ் நிலையம் வரையில், சாலையோர மரங்களில் உள்ள அட்டைகள் மற்றும் போர்டுகள் நீக்கப்பட்டு அவை, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விரைவில் ஆர்.எப். சாலை மற்றும் புது தாராபுரம் சாலையில் மரங்களில் உள்ள விளம்பரங்கள் அகற்றப்படும் எனத் தெரிகிறது.