தினமலர் 02.02.2010
மாநகராட்சி அதிரடி நடவடிக்கை: தினமலர் செய்தி எதிரொலி
சென்னை: தினமலர் செய்தி எதிரொலியால், தி.நகர் பகுதியில் சென்னை மேயர் அதிரடிச் சோதனை மேற்கொண்டு, சுகாதார கேடு ஏற்படுத்திய, 15 நடைபாதைக் கடைகளை அகற்றவும், மூடவும் உத்தரவிட்டார்.
"தி.நகர் சிவா - விஷ்ணு கோவில் அருகில், பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் கழிவுகள் போடப்பட்டுள்ளன' என்று, "தினமலர்' நேற்று படத்துடன் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மேயர் சுப்ரமணியன், நேற்று காலை கோடம்பாக்கம் மண்டல அலுவலர் ஞானமணியுடன் சென்று, தி.நகர் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். மேட்லி சாலையில் ஐந்து துரித உணவகங்கள், நடேசன் சாலையில் நான்கு துரித உணவகங்கள், ஒரு தேநீர் விடுதி, ஒரு சிப்ஸ் கடை மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவைகளையும், கில்டு சாலையில் செயல்பட்ட ஒரு துரித உணவகமும், முத்துரங்கன் சாலையில் இரண்டு துரித உணவகங் களும் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருப்பதை அறிந்து, உடனடியாக அந்த கடைகளை அகற்ற, மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், இறைச்சிக் கழிவுகளை போட்டு, சுகாதார கேடு ஏற்படுத்தியதோடு, போக்குவரத்து இடையூறும் ஏற்படுத்தியதற்காக, அந்த கடைகளை மூடும்படி, மேயர் உத்தரவிட்டார். கில்டு சாலையில் குவிந்திந்த குப்பைகள் மற்றும் கழிவுகள், மேயர் முன்னிலையிலேயே அகற்றப்பட்டன.