தினமணி 04.02.2010
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரூர், பிப்.3: அரூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. அரூர் வழியாக சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, வேலூர், சென்னை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு செல்லும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதனால் அரூர் நகர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் பல வந்தன. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரூர் பழையப்பேட்டை பாலம் அருகே தொடங்கி கடைவீதி, பஸ் நிலையம், வர்ணதீர்த்தம் வழியாக கச்சேரிமேடு வரையிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.