தினமலர் 05.02.2010
அமைச்சர் வசிக்கும் வார்டில் ஆக்கிரமிப்பு பறிபோகிறது ரூ.5 கோடி மதிப்பு 'ரிசர்வ் சைட்'
கோவை : அமைச்சர் வசிக்கும் வார்டில் "ரிசர்வ் சைட்' இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது. தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், வேடிக்கை பார்க்க்கிறது.கோவை - திருச்சி ரோட்டிலிருந்து உடையாம்பாளையம் செல்லும் வழியில் பி. ஆர்.லே-அவுட் உள்ளது. கோவை மாநகராட்சியின் 14வது வார் டிலுள்ள இந்த "லே-அவுட்' கடந்த 1976ல் நகர ஊரமைப்புத்துறையின் அங் கீகாரம் பெற்று அமைக்கப்பட்டது.
மொத்தம் 5.39 ஏக்கரிலுள்ள இந்த "லே - அவுட்'டில், 51 மனையிடங்கள் விற்கப்பட்டன; இதில், 45 சென்ட் இடம்,பொதுமக்கள் பயன்பாட்டுக்குரிய இடமாக ஒதுக்கப்பட்டது. "லே-அவுட்' அமைக்கப்பட்டபோது, இப்பகுதி சிங்காநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. "லே - அவுட்' அங்கீகாரம் வழங்கும் போதே, இதற்கான "ரிசர்வ் சைட்' இடத்தை நகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைத்திருக்க வேண்டும் ; ஆனால், ஒப்படைக்கப்படவில்லை. இந்நகராட்சி, கோவை மாநகராட்சிப் பகுதியாக மாறிய பின்னரும் இதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் "ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்புகள் குறித்த பிரச்னைகள் மெதுவாக தலைதூக்கின.
குடியிருப்போர் நலச்சங்கங்களின் முயற்சியால், கோவை நகருக்குள் இருந்த ஏராளமான "ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோவை கமிஷனராக முத்துவீரன் இருந்த போது அதிரடி துவங்கியது. அன்சுல் மிஸ்ரா கமிஷனரான பின் "ரிசர்வ் சைட்'களுக்கு முழு விமோசனம் கிடைத்தது. நகரம் முழுவதும் இருந்த "ரிசர்வ் சைட்'கள் பட்டியலிடப்பட்டு, அனைத்து இடங்களிலும் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அத்துடன், மாநகராட்சி இணைய தளத்திலும் இந்த இடங்கள், இது தொடர்பான வழக்குகள், பரப்பளவு, தற்போதைய நிலை பற்றிய தகவலும் வெளியிடப்பட்டது.இதன் பின்னரே, பி.ஆர்.லே- அவுட்டில் இருந்த குடியிருப்புவாசிகள் விழித்துக் கொண்டு, தங்கள் "லே-அவுட்' டிற்கான "ரிசர்வ் சைட்' இடத்தை தேடினர். அந்த இடம், அதை அடுத்துள்ள விவசாய நிலத்தின் ஒரு பகுதியாக இருந்ததை கண்டனர். அதையும் ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வந்தனர்.அந்த இடத்தை மீட்டு, பூங்கா அமைத்துத் தருமாறு இப்பகுதியிலுள்ள மக்கள் சார்பில் கோவை மாநகராட்சி கமிஷனருக்கு மனு கொடுக்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இந்த இடத்தை அளப்பதற்குக் கூட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையில், இந்த இடத்தை முழுமையாக ஆக்கிரமிக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. முறைப்படி அங்கீகாரம் பெற்ற லே-அவுட்டில் உள்ள "ரிசர்வ் சைட்'டை மீட்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் தயங்குவதன் காரணம் புரியவில்லை. இத்தனைக்கும் இந்த வார்டு, ஆளும்கட்சி கவுன்சி லர் சேரலாதனின் வார்டாகும். இதே வார்டில்தான் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பழனிச்சாமியும் வசிக்கிறார். இந்த "ரிசர்வ் சைட்'டுக்கு நேர் எதிரிலேயே மாநகராட்சி பணிக்குழுத்தலைவர் ராமசாமி வீடும் உள்ளது. ஆனால், இவர்கள் யாருமே இந்த "ரிசர்வ் சைட்'டை மீட்கவோ, அங்கு பூங்கா அமைக்கவோ முயற்சி எடுக்கவில்லை.
இன்றைய நிலையில், இந்த இடத்தின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய் இருக்கும் என்பதால், ஆக்கிரமிப்பு செய்ய பலரும் ஒத்துழைக்கிறார்களோ என்ற கேள்வியும் எழுந் துள்ளது. இதே "லே - அவுட்'டை ஒட்டி அமைந்துள்ள கோத்தாரி லே-அவுட் "ரிசர்வ் சைட்' இடமும் வழக்கில் உள்ளது. இந்த இடங்கள் தொடர்பான வழக்கை விரைவாக முடித்து, இந்த இடங்களை மீட்டு பூங்கா அல்லது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென்பதே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு.
இது குறித்து, மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது, ""பி.ஆர். லே-அவுட் அங்கீகாரம் பெற்ற லே-அவுட்டாக இருந்தாலும், "ரிசர்வ் சைட்' இடம் முறைப்படி ஒப்படைக்கப்படவில்லை. அந்த இடத் துக்கு சிலர் உரிமை கொண்டாடுகின்றனர். ஆவணங்களைப் பார்த்து, அந்த இடத்தை அளந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.