தினமணி 10.02.2010
பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தல்
திருச்சி, பிப். 9: திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கோயில், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், குருத்துவாரா ஆகிய மத சம்பந்தப்பட்ட இனங்கள் வாயிலாக அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதி உள்பட 9 வட்டங்களிலும் மத சம்பந்தப்பட்ட இனங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி உடனடியாக அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திக் கொள்ளாவிட்டால் மாவட்ட நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும் என்றார் அவர்.