தினமலர் 11.02.2010
ஆக்ரமிப்பு அகற்றம் தொடர்கிறது: 14 குடிசை வீடுகள் அகற்றம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், திடீர் கடைகள் அகற்றப்பட்டன.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு இடையூறாக இருந்து வரும் ஆக்ரமிப்புகள், மக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்ரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அகற்றி வருகிறது.நேற்று மாநகராட்சி முதுநிலை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி பகுதியில் சில இடங்களிலும் ஆக்ரமிப்புகளை அகற்றினர்.சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி வாறுகால் அமைப்பதற்கு இடையூறாக இருந்த குரூஸ்புரம் பகுதியில் 14 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் அகற்றப்பட்டது. திருச்செந்தூர் ரோட்டில் கால்வாய் அமைப்பதற்கு இடையூறாக இருந்த ஓட்டு வீடு இடிக்கப்பட்டது. தேவர்புரம் ரோட்டில் திடீரென முளைத்த திடீர் கடைகள் அகற்றப்பட்டன.அரசு திட்டங்களுக்கு இடையூறாக மற்றும் மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்புகள் முழுமையாக அகற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக முதுநிலை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் தெரிவித்தார்.