தினமணி 12.02.2010
சூளைமேடில் ஆக்கிரமிப்பு அகற்றம்
சூளைமேடு நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள். சென்னை, பிப். 11: சூளைமேடு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலையில் ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.
பொது மக்களிடமிருந்து தொடர் புகார்கள் வந்ததையடுத்து சூளைமேடு நெடுஞ்சாலை மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலையில் 3 அடி தூரத்துக்கு சாலையை ஆக்கிரமித்து சாய்வு தளம் மற்றும் பழம், பாக்கு கடைகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 250 கடைகள் இதுபோல் சாலையை ஆக்கிரமித்திருந்தன.
ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 50 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். ராயப்பேட்டை பாரதி சாலையில் குஷன் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என்று மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.