தினமணி 16.02.2010
உக்கடத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 20 கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
கோவை, பிப்.15: உக்கடம் பஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 20 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி (படம்) அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் அதிக கடைகள் இருப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆணையரின் உத்தரவின் பேரில், கோவை கோட்டாட்சியர் பாலசந்திரன், வட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாநகரக் காவல் துணை ஆணையர் பி.நாகராஜன், தெற்கு மண்டல உதவி ஆணையர் லட்சுமணன், நகரமைப்பு அலுவலர் செüந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு திங்கள்கிழமை சென்றனர்.
அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் இயந்திரங்களுடன் அதிகாரிகள் இடிக்கத் துவங்கினர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மொத்தம் 20 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.