தினமணி 17.02.2010
விருதுநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றல்
விருதுநகர், பிப். 16: விருதுநகரில் கடை வீதிகள் மற்றும் முக்கிய இடங்களில் ஆக்கிரமித்திருந்தவைகளை நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தினர்.
விருதுநகர் மாவட்ட நிலையில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் வலியுறுத்தினார்.
இதையொட்டி விருதுநகரிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் கடை வீதிகளில் ஆக்கிரமித்திருந்த ஆக்கிரமிப்புக்களை அவரவர் தானகவே அகற்ற வேண்டும் என்றும், அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நகரில் பல இடங்களில் ஆக்கிரமிப்புக்களை கடைக்காரர்களே அகற்றி விட்டனர்.
கடை வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தவை, தேசப்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்புப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ராமசுப்பு, உதவிப் பொறியாளர்கள் புதிய நாயகம், நவநீதகிருஷ்ணன், நகராட்சித் திட்ட அதிகாரி மாலதி ஆகியோர் பார்வையிட்டனர்.
விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் கூடாது என்று சாலையோர வியாபாரிகள் மற்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.