ஆரணி மகளிர் பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
ஆரணி, பிப். 25: ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.
ஆரணி நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியது:
முருகன்: ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். இங்கு அனுமதியின்றி கடைகள் கட்டியுள்ளதை இடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட வேண்டும். விஏகே நகர் பகுதியில் வீடுகள் அனுமதியின்றி கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு வரி விதிக்க வேண்டும். கோட்டை மைதானம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆணையர்: பள்ளி இடத்தில் கடைகள் அனுமதியின்றி கட்டியிருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியிருந்தால், ஆய்வு செய்து வரி விதிக்கப்படும்.
எஸ்.கே.ரத்தினகுமார்: நகரில் வரி வசூல், குத்தகை பாக்கி வசூலித்தால் வார்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் செய்ய ஏதுவாக இருக்கும். வரி கட்டாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலாளர் ராமஜெயம்: நமக்கு நாமே திட்டம் மூலம் 3-ல் ஒரு பங்கு நிதி கட்டி தங்கள் பகுதி திட்டப் பணிகளை செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவு வந்துள்ளது.
ஆ.ந.ரமேஷ்: ஏற்கெனவே இருந்த நமக்கு நாமே திட்டத்தில் 4-ல் ஒரு பங்கு நிதியை கட்டி பணிகள் செய்துகொள்ளலாம் என உத்தரவு இருந்தது. அதேபோல்
தற்போது வந்திருக்கும் திட்டத்தையும் 4-ல் ஒரு பங்கு தொகை கட்ட மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் பேசினர்.
நகராட்சி ஆணையர் சசிகலா, நகர்மன்றத் துணைத் தலைவர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.