தினமலர் 01.03.2010
ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நகர போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., மெய்யழகன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., நாராயணசாமி, இன்ஸ் பெக்டர் செங்கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன், நிலவள வங்கி முன்னாள் தலைவர் வீரசேனன், நகராட்சி துணைத் தலைவர் கண்ணன், வர்த்தக சங்க துணைத் தலைவர் அய்யமுத்துநாடார், லாரி உரிமையாளர் சங்க தலைவர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: பட்டுக்கோட்டை நகருக்குள் நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் 3ம்தேதி நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை கூட்டாக சேர்ந்து நில அளவை செய்யப்படும். பின்னர் ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற கால அவகாசம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சியினர், பொதுமக்கள் நகருக் குள் விளம்பர தட்டிகள் வைப்பது, தலைமை அஞ்சலகம் அருகே பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது. அனுமதி பெற்ற விளம்பர தட்டிகள் வைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாத தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது. நகருக்குள் சாலைகளில் குவிந்துள்ள மணலை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுப்பது. நகருக் குள் இருசக்கர வாகனம், கார்கள் நிறுத்த இடம் தேர்வு செய்து அதற்கான அறிவிப்பு பலகைகள் வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ்கள் நிறுத்தும் இடம் குறித்து நகராட்சி நிர்வாகம் போர்டு வைத்து, அந்த இடங்களில் நிறுத்தாத பஸ் டிரைவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது. நகரில் கடைகளுக்கு லாரிகள் மதியம் 12 மணி முதல் 3 வரை பொருட்கள் இறக்குவது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பது. பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் காவல்துறை உதவியுடன் வரும் 8 அல்லது 9ம்தேதிக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.