தினமலர் 03.03.2010
ஆக்கிரமிப்பு அகற்றல்: பணி ஒத்திவைப்பு
வேலூர்:வேலூர் டோல்கேட் பகுதியில் இன்று நடப்பதாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.வேலூர் அல்லாபுரம் பஸ் நிறுத்தத்தை ஒட்டியுள்ள டோல்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று (பிப்.3ல்) அகற்றப்படும் என மாநகராட்சி நிர்வாகம் 2 நாட்கள் முன்பு அறிவித்திருந்தது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி வியாபாரிகளிடம் நேரில் சென்று கூறினர்.
இன்று மேற்கொள்வதாக இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு, போலீஸ் பாதுகாப்பு கேட்டு வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் பாண்டியராஜனிடம், நகரமைப்பு அலுவலர் கண்ணன் கடிதம் கொடுத்தார். ஆனால் அதை இன்ஸ்பெக்டர் வாங்க மறுத்து விட்டார். ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் இருந்து இடிபாடுகள் இன்னமும் அகற்றப்படமல் உள்ளது.
இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இடிபாடுகளை அகற்றிய பின்னரே மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கலாம் என்றும், அப்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் கூறியதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, சிதம்பரம் பல்கலை.,யில் நடந்த மாணவர்கள் பிரச்னைக்காக வேலூர் பகுதியில் இருந்து ஏராளமான போலீசார் சென்று விட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றல் பணிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்று கூறினர்.எனவே இன்று டோல்கேட் பகுதியில் நடப்பதாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தள்ளி வைத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர