தினமலர் 05.03.2010
பெருந்துறை நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பெருந்துறை: பெருந்துறையில் ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. பெருந்துறையில் வர்த்தக நிறுவனங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. நிறுவனங்கள் தங்கள் விளம்பர பலகைகளை ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ளன. போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் செல்ல இட வசதியின்றி, விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயராமன், அனைத்து சங்கங்களையும் கூட்டி விவாதித்தார். அதன் பயனாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல முறை தேதி குறிக்கப்பட்டது. ஆனால், ஒரு அதிகாரி இருந்தால், மற்றவர் இருப்பதில்லை. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளி போய் கொண்டே இருந்தது. நேற்று பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். காலை 9 மணி முதல் இரவு வரை தொடர்ந்து நடந்தது.