தினமலர் 09.03.2010
சக்கர தீர்த்த குளத்தை சுற்றி ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி
திருவண்ணாமலை : தி.மலை நகரில் சக்கர தீர்த்த குளத்தை சுற்றி ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. "திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் கோயில் ராஜகோபுரம் எதிர்புறம் உள்ள சக்கர தீர்த்த குளத்தை சுற்றிலும் அதிகளவில் தள்ளுவண்டி கடைகள் உட்பட ஆக்கிரமிப்புகள் காணப்படுகிறது. இது, அங்குள்ள சக்கரதானீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது' என கலெக் டருக்கு புகார்கள் வந்தன. எனவே, இங்குள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் சேகர், இன்ஜினியர் சந்திரன், தாசில்தார் சுப்ரமணி, இன்ஸ் பெக்டர் குணசேகரன் அடங் கிய கூட்டுக்குழு சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. இதனை கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது, அந்த குளத் தின் கரையில் 2 கடைகள் இயங்கி வந்தன. எதற்காக அவைகளை அப்புறப்படுத்தவில்லை என்று நகராட்சி அதிகாரிகளிடம் அவர் கேட் டார். அதற்குள் அங்கு வந்த வியாபாரிகள், தாங்கள் வாடகைக்கு இருப்பதாகவும், அதற்கு உரிய ஆவணம் உள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், அந்த இடத்தில் கடைகள் இயங்குவதற்கு உரிமம் உள்ளதா என்பது குறித்த அந்த ஆவணங்களை சரிபார்க்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், தேரடி வீதியில் விநாயகர் தேர் அருகே மாணிக்கவாசருக்கு தனி கோயில் உள்ளது. மிக பழமையான இந்த கோயில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதாக கலெக்டருக்கு தகவல் வரவே, அங்கு சென்றும் ஆய்வு செய்தார். அதில், கோயில் இருந்த இடம் இப்போது கடையாகவும், வீடாகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த இடத்தில் இப்படி ஒரு கோயில் இருப்பது நகரில் பலருக்கும் தெரியாமல் இருந்தது. கலெக்டரின் ஆய்வுக்கு பிறகே மாணிக்கவாசகர் கோயில் இருப்பது வெளியே தெரிய வந்தது. இது குறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: சக்கர தீர்த்த குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார் வந்தன. இவைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இனி ஆக்கிரமிப்புகளே அங்கு உருவாகாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.