தினமலர் 11.03.2010
மார்ச் 13ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு
ராமநாதபுரம் : மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் மார்ச் 13ல் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன் பேசியதாவது: மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீசார் முன்வரவேண்டும். ராமநாதபுரத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை மார்ச் 13ல் அகற்ற வருவாய்துறை , போலீசார், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல்அலுவலர்கள் தயாராக வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் திரும்பி வரும் போது, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், என்றார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் சிறப்பாக பணியாற்றிய ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன், உதவியாளர்கள் சுரேஷ்குமார், மார்டின் ராஜா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பிரதீப்குமார் எஸ்.பி., பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், அரசு போக்குவரத்து கோட்ட மேலாளர் யோகேஸ்வரன் உட்பட பலரும் பங்கேற்றனர்.