தினமணி 11.03.2010
ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் - ஆட்சியர்ராமநாதபுரம், மார்ச் 10: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றுமாறு, ஆட்சியர் த.ந. ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி, விபத்து ஏற்படுவதைத் தடுக்க போக்குவரத்துக் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலையோரங்களில் உள்ள மணல்களை அப்புறப்படுத்தவும், நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.
மேலும், நியாய விலைக் கடைகளிலிருந்து அரிசிக் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் சனிக்கிழமைக்குள் அகற்றிட வேண்டும்.தொடர்ந்து, பெண்கள் மீதான வன்கொடுமையைத் தடுக்கும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, மாவட்டத் தலைநகர் மற்றும் தாலுகா தலைமையிடங்களில் பேரணிகள், ஊர்வலங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்திட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் திரும்பி வரும்போது அவர்களை தீவிரமாகக் கண்காணித்து, உரிய தண்டனை வழங்கிட வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தின்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது சிறப்பாக பணியாற்றிய, ராமேசுவரம் வட்டாட்சியர் முருகேசன், உதவியாளர்கள் சுரேஷ்குமார், மார்ட்டின்ராஜா ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி கே. பாலசுப்பிரமணியம், எஸ்.பி. பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பாஸ்கரன், உள்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.