தினமலர் 15.03.2010
பஸ் ஸ்டாண்டு அமைக்க ஆக்ரமிப்பு அகற்றும் பணி
குளித்தலை: குளித்தலை அருகே தோகமலையில் புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கவும், மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காகவும் ஆக்ரமிப்பு அகற்றும் பணிகள் நடந்தன.குளித்தலை அருகே தோகமலையில் புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கும் பணிக்காக, 27.24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த வாரம் டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலர் கவிதா முன்னிலையில் பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில், புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கவும், மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக சாலை ஆக்ரமிப்புக்களை அகற்றும் பணி நடந்தது.
டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலர் கவிதா, தாசில்தார் ஜெயமூர்த்தி, யூனியன் கமிஷனர்கள் ரகுபதி, மணி, ஆர்.ஐ., ஜீவன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முன்னிலையில், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டின் உள்புறம் இருந்த 19 கடைகள், சாலையின் இருபுறமும் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
பஸ் ஸ்டாண்டில் காலனி கடைகள் நடத்தி ஒன்பது பேர், பேச்சுவார்த்தைக்குப் பின் தாங்களாகவே முன் வந்து கடைகளை அகற்றிக் கொண்டனர். இவர்கள் தங்களுக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் முன் உரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்ரமிப்பு அகற்றுப்பணியின் போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.