தினமலர் 15.03.2010
சாலையோர ஆக்கிரமிப்பு வருவாய் துறையினர் ஆய்வு
பந்தலூர் : பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு குறித்து, வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை, ஊராட்சிக்கு உட்பட்ட சாலை, கிராமப்புற சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு, பொதுப்பணித் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் செல்லும் பகுதியில் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்படும் கூட்டத்தில் சமர்பிக்க, அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பந்தலூர் - சோலாடி மாநில நெடுஞ்சாலை, எலியாஸ்கடை - நம்பியார்குன்னு சாலை, நெலாக்கோட்டை - பாட்டவயல் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நெல்லியாளம் நகராட்சி, சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்து விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீராம், பந்தலூர் தாசில்தார் விஜயகுமாரி, பிர்கா சர்வேயர் சேவியர், எருமாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், வி.ஏ.ஓ.,க்கள் தனராஜ், குமார், உதவியாளர்கள் ராஜேந்திரன், தங்கப்பன் பங்கேற்றனர்.
கூடலூர் தாலுகா பகுதியில் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன் தலைமையில், தாசில்தார் ரெங்கநாதன், தாலுகா சர்வேயர் போஜன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, பேரூராட்சி சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.