தினமணி 16.03.2010
ராமேசுவரம் நகராட்சியில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வட்டாட்சியர்
ராமேசுவரம், மார்ச் 15: ராமேசுவரம் நகராட்சியில் சாலையோரத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகள், வீடுகள் புதன்கிழமை அகற்றப்பட உள்ளதாக ராமேசுவரம் வட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார்.
ராமேசுவரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட கோயில் நான்கு ரத வீதி, திட்டகுடி, வர்த்தகன் தெரு, மார்க்கெட் தெரு, தேவர் சிலை, வேர்க்கோடு பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும் பக்தர்களும், பொதுமக்களும் நடமாட முடியாமல் பரிதவிக்கின்றனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து ராமேசுவரம் வட்டாட்சியர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ராமேசுவரம் நகராட்சி எல்லைகுள்பட்ட சாலையோரங்களில் வணிகக் கடைகள், வீடுகள் ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
எனவே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை (மார்ச் 17) அகற்றப்படவுள்ளன.
இப்பணியில் வருவாய்த்துறை ஊழியர்கள், நகராட்சி ஆணையர் போஸ் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் போலீஸôர் ஈடுபட உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என வட்டாட்சியர் முருகேசன் கேட்டுக்கொண்டார்.