தினமணி 16.03.2010
காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றல்
போடி, மார்ச் 15: போடியில், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிக் கடையை அகற்ற நகராட்சி கவுன்சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
போடி நகராட்சி உப்பு தண்ணீர் சந்தையில் இயங்கும் தினசரி காய்கறிச் சந்தைப் பகுதியில் கடைகளின் முன்பகுதியில் மண்மேடு, சிமெண்ட் தளம் அமைத்தும், கூரைகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் இப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
திங்கள்கிழமை இப் பகுதியில் நகராட்சி ஆணையாளர் க. சரவணக்குமார், உதவிப் பொறியாளர் குணசேகரன், கட்டட ஆய்வாளர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந் நிலையில், போடி நகராட்சி கவுன்சிலர் பரமசிவம் என்பவர் இப் பகுதியில் நகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, இறைச்சி கடை அமைத்திருந்தாராம்.
அதனை அகற்ற முயன்றபோது, அவர் நகராட்சி அலுவலர்களுடனும், பொக்லைன் இயந்திர வாகன ஓட்டுநருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, நகராட்சி சார்பில் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது.
அதன் பேரில், போலீஸôர் வரவழைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.