தினமலர் 23.03.2010
திருச்சி மாநகராட்சி நிலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்
திருச்சி: திருச்சி வண்ணாரப்பேட்டை உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தின் ஒருபகுதியை பார்வையற்றோர் நலச்சங்கம் கடந்த 1987ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வருகிறது. தற்போது அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று மாநகராட்சி கோரிவருகிறது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
பார்வையற்றோர் பயன்படுத்தி வந்த இடத்துக்கு அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் ஒரு பிரிவினர் சிலுவை கோவில் ஒன்றை அமைத்தனர். இதற்கு போட்டியாக அந்த இடத்துக்கு பக்கத்திலேயே மற்றொரு பிரிவினர் ஆஞ்னேயர் சிலை வைத்து கும்பிட்டு வந்தனர். இரு மதத்தின் கோயில்களும் அருகருகே இருந்ததால், அந்த பகுதி மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
இதையடுத்து மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை கோவில்களை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் வண்ணாரப்பேட் டை வந்தனர். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பலாம் என்பதால், உறையூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீஸார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். போலீஸாரின் துணையோடு மாநகராட்சியினர் அந்த இரு கோவில்களையும் இடித்து லாரியில் அள்ளிச் சென்றனர். இதனால் அந்த பகுதி நேற்று காலை இரண்டு மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.